கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. 50 பேருக்கு தொடர்பு! கனகராஜ் சகோதரர் தனபால் ஆஜர்!

Spread the love

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் சிபிசிஐடி முன்பு ஆஜராகியுள்ளார். ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு பரபரப்பான குற்றசாட்டுகளை முன்வைத்து வரும் தனபால் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி காவலாளி ஒருவர் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த கும்பலில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் அதே ஏப்ரல் மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு வழக்கில் இதுவரை சுமார் 230 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 5 வருடங்களாக உதகை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து நடந்த உயிரிழப்புகள், கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதுவும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சூடுபிடித்தது. இதனிடையே, இந்த வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக, உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை நடத்த வேண்டும், எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் எனது சகோதரர் கனகராஜ் சில விஷயங்களை செய்தார். எனது சகோதரர் கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை, கொலை செய்யப்பட்டார் என பல்வேறு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், எனது உயிருக்கு ஆபத்து உள்ளது, என்னால் தனியாக நடமாட முடியவில்லை, கோடநாடு சம்பவம் குறித்து வெளிய சொல்ல கூடாது என்று என்னை மிரட்டுகிறார்கள் எனவும் கூறியிருந்தார். மேலும், சிபிசிஐடி என்னை விசாரணைக்கு அழைக்கும்போது எனக்கு தெரிந்த அனைத்து உண்மைகளையும் கூறிவிடுவேன் என்றார.

இவரது பரபரப்பான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில், எடப்பாடி பழனிச்சாமி சிக்குவாரா எனவும் கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக கனகராஜ் சகோதரர் தனபால் நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் தனபால் நேரில் ஆஜராகுமாரும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக கனகராஜ் சகோதரர் தனபால் நேரில் ஆஜராகியுள்ளார்.

கோவையில் விசாரணைக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய தன்பால், சம்மன் அனுப்பியதால் விசாரணைகள ஆஜராக வந்துள்ளேன். கோடநாடு சம்பவத்தில் 50 பேருக்கு தொடர்பு உள்ளது. கனகராஜ் கொலை செய்யப்பட்டார் என்பதில் சந்தேகம் இல்லை. சேலம், நீலகிரி, கோவை, திருப்பூரை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள், காவல் அதிகாரிகளின் பட்டியலை சமர்ப்பிக்க உள்ளேன். அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள். பட்டியலில் உள்ளவர்களை விசாரிக்க கோரிக்கை வைக்க உள்ளதாகவும், கோடநாடு சம்பவம் குறித்து எனது சகோதரர் என்னிடம் அனைத்தையும் கூறியுள்ளார். அதனடிப்படையில், இன்று விசாரணையில் தெரிவிக்க உள்ளேன் என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours