கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதால் அங்கு மாநில அரசின் சார்பில் மிக வேகமான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக அங்கு ஊரக மற்றும் நகர பகுதிகள் பெரும்பாலானவற்றில் தண்ணீர் தேங்கி உள்ளது. அந்த தண்ணீர் டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு வழி வகுத்தது. அதன் காரணமாக மாநிலம் எங்கும் தற்போது டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.
கடந்த சில நாட்களில் மாநிலத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெங்களூருவில் மட்டும் 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, பெங்களூரு நகர எல்லைக்குள் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்துவது, தண்ணீர் தேங்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை சரிசெய்வது, தூய்மையை பராமரிப்பது போன்ற பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை மக்களை அறிவுறுத்தி உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours