சூரியனை நோக்கி பயணம்: ஆதித்யா எல்-1, கவுண்டவுன் இன்று தொடக்கம்!

Spread the love

சூரியனை ஆய்வு செய்வதற்காக நாளை (செப்டம்பர் 2) காலை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல் 1 விண்கலம். இந்நிலையில், இதற்கான கவுன்ட் டவுன் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். மேலும், ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவுவதற்கான ஒத்திகை முடிந்துவிட்டதாக கூறிய அவர், இன்று கவுன்ட் டவுன் தொடங்க உள்ளதாகவும் கூறினார்.

ஆதித்யா எல்-1 செயற்கைக்கோளை PSLV-C57 ராக்கெட் மூலம் நாளை காலை 11:50 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ. சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி நிலவில் ஆராய்ச்சி செய்து வரும் நிலையில், ஆதித்யா எல்-1 சூரியனை ஆராய உள்ளது.

1,470 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்-1 விண்கலமானது சூரியனை நோக்கி ஏவப்பட்டவுடன், பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில், அதாவது கிட்டத்தட்ட 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள லாக் ரேஞ்ச் புள்ளி-1 (எல்-1) என்ற புள்ளியில் வைக்கப்படும்.

இந்த விண்கலத்தை எல்-1 புள்ளியைச் சுற்றியுள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் (Halo Orbit) வைப்பதால், சூரியனை எந்த ஒரு கிரகண மறைவும் இல்லாமல் தொடர்ந்து ஆய்வு செய்து தகவல்களை அனுப்ப முடியும்.

ஆதித்யா எல்-1 விண்கலம், மின்காந்த மற்றும் துகள் மற்றும் காந்தப்புல கண்டுபிடிப்பான்களைப் பயன்படுத்தி, ஃபோட்டோஸ்பியர் எனப்படும் சூரியனின் ஒளிரும் மேற்பரப்பு, குரோமோஸ்பியர் எனப்படும் நடுத்தர மேற்பரப்பு மற்றும் மெல்லிய வெப்ப வாயுக்களால் உருவான சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற அடுக்கு எனப்படும் கரோனா ஆகியவற்றைக் ஆய்வு செய்ய ஏழு பேலோடுகளை விண்கலம் சுமந்து செல்கிறது.

இந்த எல்-1 புள்ளியில் வைக்கப்படும் ஆதித்யா எல்-1 விண்கலத்தில் இருக்கும் நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கின்றன, மீதமுள்ள மூன்று பேலோடுகள் லாக்ரேஞ்ச் புள்ளி எல்-1 -ஐ சுற்றி இருக்கக்கூடிய துகள்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கின்றன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours