நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. சந்திரயான் நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் “இந்தியா நிலவில் உள்ளது” என்று அறிவித்தார்.
நிலவினை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அப்போது பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், “திட்டமிட்டபடி விண்கலம் பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது எனவும் சந்திரயான்-3 நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது எனவும் தெரிவித்திருந்தார். மேலும் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் மீண்டும் அது மிகவும் வலுவான ஒரு விண்கலம் என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளது” என்று அப்போது அவர் கூறியிருந்தார்..
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1-ம் தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும் வகையில் சந்திரயான்ன் 3 ன் பயணப் பாதை மாற்றியமைக்கப்பட்ட்து. தொடர்ந்து 5 நாள் பயணத்துக்கு பின் கடந்த 5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சந்திரயான்-3 நுழைந்தது. ஆகஸ்ட் 17ம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலவுக்கு 153 x 163 கி.மீ. தொலைவில் ரோவர் பயணித்து வந்த நிலையில் லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் புதன்கிழமை இந்திய நேரப்படி மாலை சுமார் 6 மணி அளவில் சந்திராயன்-3ஐ நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதன்கிழமை காலை முதல் லேண்டரைத் தரையிரக்குவதற்கான வேலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு லேண்டரை தரையிரக்கும் பணியினை விஞ்ஞானிகள் தொடங்கினர். லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு லேண்டர் நிலவினை நோக்கி பயணித்தது.
![](https://politrics.in/wp-content/uploads/2023/08/image-150.png)
இதனைத் தொடர்ந்து நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மாலை 6.02 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது, இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கைகளைத் தட்டி அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சாதனை குறித்த அறிவிப்பை, இஸ்ரோ தலைவர் சோம்நாத், இந்தியா தற்போது நிலவின் மீது இருப்பதாக பெருமிதம் பொங்க குறிப்பிட்டார்.
இந்த வெற்றியை குறித்து பல தலைவர்கள் தங்கள் கருத்துகளை அவர்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
![](https://politrics.in/wp-content/uploads/2023/08/image-149.png)
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு,இன்று சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதன் மூலம், நமது விஞ்ஞானிகள் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளதோடு மட்டுமல்லாமல், புவியியல் குறித்த எண்ணங்களையும் மறுவடிவமைத்துள்ளனர் எனப் பதிவிட்டுள்ளார். மேலும் இது உண்மையிலேயே ஒரு முக்கியமான நிகழ்வு எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெற்றிகரமாக சந்திரயானை தரையிறக்கிய இஸ்ரோவிற்கு வாழ்த்துகள் எனவும் நிலவின் மேற்பரப்பிற்கு சென்ற நான்காவது நாடாக இந்தியாவை தன்னை நிலை நிறுத்தியுள்ளது ஒரு மகத்தான சாதனை எனவும் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, அயராத முயற்சிகள் மற்றும் புதுமைக்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
![](https://politrics.in/wp-content/uploads/2023/08/image-148.png)
பிரதமர் நரேந்திர மோடி, இந்த தருணம் மறக்க முடியாதது எனவும் இந்த தருணம் முன்னோடியற்றது எனவும் இந்த தருணம் வளர்ந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வு எனவும் பேசியுள்ளார். மேலும், இந்த நொடியானது புதிய இந்தியாவின் முழக்கம் எனவும் இந்த தருணம் 140 கோடி மக்களின் துடிப்பின் சக்தி எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த தருணம் இந்தியாவின் புதிய ஆற்றல், புதிய நம்பிக்கை, புதிய உணர்வு எனவும் இந்த தருணம் உயரும் இந்தியாவிற்கான அழைப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
![](https://politrics.in/wp-content/uploads/2023/08/image-151-881x1024.png)
இந்திய துணை குடியரசு தலைவர், நிலவில் தனது கொடியை ஏற்றிய இந்தியா எனவும் ஒப்பற்ற தனித்துவமான உலக சாதனை எனவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், நம் இந்தியா பெரியது எனவும் இஸ்ரோவால் நாடு பெருமை கொள்கிறது எஅன்வும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, சரித்திரம் படைத்த இந்திய விஞ்ஞானிகள், சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறக்கியதன் மூலம், 21ஆம் நூற்றாண்டு நம்முடையது என்பதை இந்தியா மீண்டும் நிரூபித்துள்ளது எனக் கூறியுள்ளார்.
![](https://politrics.in/wp-content/uploads/2023/08/image-152-1024x576.png)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, இன்றைய முன்னோடி சாதனைக்காக இஸ்ரோ குழுவிற்கு வாழ்த்துகள் எனவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 1962 ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் விண்வெளித் திட்டம் புதிய உயரங்களை அடைந்து, கனவு காணும் இளம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours