தமிழகத்தில் திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதம் மாணவர்கள் எளிதாக மருத்துவராகும் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகிலுள்ள புகழ்பெற்ற நல்லாட்டூர் ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், தமிழகத்தில் ஆன்மித்தோடு கலந்த வளர்ச்சி தான் இருக்க வேண்டும் என்றும், ஆன்மிகம் தான் தமிழை வளர்த்தது என்றும் சொல்லக்கூடிய நிலையில் நாம் இருப்பதாகத் தெரிவித்தார்.
இன்று தமிழகத்தில் திமுகவினர் இருந்துவரும் உண்ணாவிரதம், மாணவர்கள் எளிதாக மருத்துவராகும் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகக் கூறினார்.
மேலும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வு வேண்டாம் என்று கையெழுத்துப் போட்ட பின்னரே ஆட்சியில் அமர்வோம் என்று கூறிய திமுகவினர், தற்போது கையெழுத்து போட்டுவிட்டு உண்ணாவிரதம் இருக்கிறார்களா அல்லது கையெழுத்துப் போடாமல் உண்ணாவிரதம் இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.
+ There are no comments
Add yours