தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரானது வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் கூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் என்னென்ன மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. எத்தனை நாட்கள் நடைபெற உள்ளது என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
வரும் அக்டோபர் மாதம் 3,4 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் உடனான மாநாடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு நிறைவடைந்த உடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவையில் என்னென்ன மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது, எத்தனை நாட்கள் நடைபெற உள்ளது என சட்டப்பேரவை அலுவல்கள் குறித்து ஆலோசிக்க சபாநாயகர் அப்பாவு தலைமையில் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது அந்த கூட்டம் முடிந்தவுடன் மேற்கண்ட விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையோடு தமிழக சட்டப்பேரவை துவங்கி ஏப்ரல் 21ஆம் தேதி சபாநாயகர் அப்பாவு நன்றியுரையோடு நிறைவு பெற்றது.
கடந்த முறை நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தொடரில் துறை ரீதியிலான கேள்விகளுக்கு 17 முறை பதில் கூறி அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முதலிடத்தில் இருந்தார். அதற்கடுத்து 15 கேள்விகளுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் கூறியிருந்தார். 14 கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் கூறியிருந்தார். 12 கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours